
கோவில்கள் வரலாறு அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர் ஒரு சமயம் கைலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், “”விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,” என்றார். அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அப்படி தேவி பார்வதி தவம் செய்த அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் “அருந்தவநாயகி’ எனப்படுகிறாள். பழு என்றால் ஆலமரம். எனவே சுவாமி ஆலந்துறையார் எனப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் இந்த பகுதி திருப்பழுவூர் என பெயர் பெற்றது.

சிறப்பம்சங்கள் : சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். இறைவன், இறைவி இத்தலத்தின் மூலவர் ஆலந்துறையார், தாயார் அருந்தவ நாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக ஆலமரமும், தீர்ததமாக பரசுராம தீர்த்தம், மற்றும் பிரம்ம தீர்த்தம், ஆகியவை உள்ளன. நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது நுழைவாயிலை அடுத்து சிறிய கோபுரம் உள்ளது. அதனைத் தொடர்ந்து விநாயகர், கொடி மரம், பலி பீடம், நந்தி, ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் இடது புறமாக அருந்தவ நாயகி அம்மன் சன்னதி உள்ளது.

சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் வாயிலில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் உள்ளனர். வலப்புறம் இச்சா சக்தியின் அருகே விநாயகர் உள்ளார். அர்ந்த மண்டபத்தில் சந்திரன், சூரியன், 63 நாயன்மார்களின் உற்சவமூர்த்திகள்,திருமணகோலத்தில்மீனாட்சிசுந்தரேசுவரர், கங்காலமூர்த்தி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இங்கு சிவகாமசுந்தரியுடன் நடராசர் உள்ள மண்டபம் காணப்படுகிறது. கருவறையின் முன்பாக நந்தி உள்ளது. மூலவர் உள்ள கருவறைக்கு வெளியே இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை கோட்டங்களில் கஜசம்காரமூர்த்தி, சபாபதி நடராசர், கமல கணபதி, தென்முக பரமன், அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீசுவரர், ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. கருவறைத் திருச்சுற்றில் வலப்புறம் விநாயகர்,உமைமங்கைபாகன், காத்தீயாயினி, சண்டிகேசுவரர், வீரபத்திரர்,மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், கிருது மகரிஷி, அத்திரி மகரிஷி, ஆங்கீரவை மகரிஷி, ஞானதட்சிணாமூர்த்தி, பிருகு மகரிஷி,பரீஷி மகரிஷி, புலஸ்திய மகரிஷி, வசிட்ட மகரிஷி, விநாயகர், பிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், கோடி விநாயகர், காசி விசுவநாதர் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். அடுத்து அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாய லிங்கம் ஆகிய மூவரின் சன்னதிகள் உள்ளன. அதற்கடுத்து கஜலட்சுமி சன்னதி அமைந்துள்ளது.

இக்கோயிலின் வெளியே வலப்புறத்தில் சற்று தூரத்தில் இடிந்த நிலையிலான ஒரு சிறிய கோயில் காணப்படுகிறது. அக்கோயிலின் உள்ளே ஒரு லிங்கத் திருமேனி உள்ளது. வழிபாட்டில் இல்லாத நிலையிலும் உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. உள்ளே போகமுடியாத அளவு வௌவால்கள் காணப்படுகின்றன. அந்த சிறிய கோயில் அமைப்பிற்கு முன்பாக இரு நந்திகள் தரையில் பதிந்தவகையில் காணப்படுகின்றன. அந்த சிறிய கோயிலைச் சுற்றி வரும்போது பல சிற்பங்களைக் காணமுடிந்தது. குடமுழுக்கு 5 ஏப்ரல் 1974, 18 சூன் 2003 மற்றும் 10 திசம்பர் 2014 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.மூலவர் : ஆலந்துறையார்(வடமூலநாதர்) அம்மன்/தாயார்: அருந்தவ நாயகி தல விருட்சம்: ஆலமரம் தீர்த்தம்: பிரம, பரசுராம தீர்த்தம் ஆகமம்/பூஜை: சிவாகமம் புராண பெயர்: திருப்பழுவூர் ஊர்: கீழப்பழுவூர் மாவட்டம்: அரியலூர் மாநிலம்: தமிழ்நாடுமுகவரி: அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர் அஞ்சல்-621 707 அரியலூர் மாவட்டம். போன்: +91- 99438 82368 அமைவிடம்: அரியலூர் – திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் கோவில் வளைவு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.

பாடியவர்கள்:திருஞான சம்பந்தர்தேவாரப்பதிகம்கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல் ஆடரவம் வைத்தபெரு மான்திடம் என்பர் மாடமலி சூளிகை யிலேறி மடவார்கள் பாடலொலி செய்ய மலிகின்ற பழுவூரே. திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 55வது தலம் திருவிழா:பங்குனி உத்திரம். பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். மேலப்பழுவூரில் உள்ள மற்றொரு சிவாலயத்தில் (பசுபதீஸ்வரம்) ஜமதக்னி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.